Archives: ஏப்ரல் 2022

இராக்காலத்தின் ஊழியக்காரர்கள்

அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.

சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.

இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.

ஆவிக்குரிய நோய் கண்டறிதல்

என் மாமனாரின் கணையத்திலிருந்த புற்றுநோய் கட்டியை கிமோ சிகிச்சை கட்டுப்படுத்தியது, ஆனால் பலனளிக்கவில்லை. அக்கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்க, அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தன் மருத்துவரிடம், “இந்த கிமோ சிகிச்சையை நான் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? ஒருவேளை மாற்று மருந்தோ, கதிர்வீச்சு சிகிச்சையை முயற்சிக்கலாமா?” எனக் கேட்டார்.

யூத ஜனங்களும் தங்கள் ஓட்டத்தில் வாழ்வா சாவா என்ற கேள்வியோடிருந்தனர். யுத்தத்தினாலும், பஞ்சத்தினாலும் சோர்ந்துபோன தேவ ஜனங்கள், தங்கள் பிரச்சனைக்கு காரணம் அதிகமான விக்கிரக ஆராதனையா, அல்லது விக்கிரக ஆராதனை போதுமானதாக இல்லையென்பதா என குழம்பினர். வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அதற்குப் பானபலிகளை அதிகம் வார்த்தால், அது தங்களைப் பாதுகாத்து, செழிப்படையச் செய்யும் என முடிவெடுத்தனர் (எரேமியா 44:17).

அவர்கள் மிகவும் தவறாக தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டதாக எரேமியா சொல்கிறார். விக்கிரகத்தை ஆராதிப்பதில் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்று அவர்கள் யோசித்தனர், ஆனால் அந்த விக்கிரகங்களை அவர்கள் வைத்திருந்தது தான் அவர்களின் தவறு. அவர்கள் தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்” (வச. 16) என்றார்கள். எரேமியா, “நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்” (வச. 23).

யூதாவைப் போலவே, நாமும் நம்மை சிக்கலில் அகப்படுத்திய பாவங்களை இருமடங்காக்கச் செய்ய தூண்டப்படலாம். உறவில் சிக்கலென்றால் நாம் தனித்து வாழ்கிறோம்; பணப்பிரச்சனை என்றாலும் நம் விருப்பப்படியே செலவுசெய்கிறோம். ஒதுக்கிவைக்கப்பட்டால் நாம் அதற்கு சமமாக மூர்க்கமடைகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளுக்கு காரணமாயிருந்த விக்கிரகங்கள் நம்மை காப்பாற்றப் போவதில்லை. நாம் இயேசுவிடம் மனந்திரும்பும்போது, அவரே நம் பிரச்சனைகளினூடே நம்மை தூக்கி சுமப்பார்.

விசுவாசத்தில் வளர்தல்

என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.

சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).

மீண்டும் பாடுங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”